நன்கொடை-நாமக்கல்லில் 4 பள்ளிகள் மீது நடவடிக்கை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்த நான்கு அரசு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து உடனே விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவி்ட்டார்.
அதன்பேரில் முதன்மைக் கல்வி அலுவலர் அப்பாதுரை தலைமையிலான குழுவினர் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, பள்ளி மாணவ, மாணவியரிடம் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட விவரங்களின்படி கொக்கராயன்பட்டை அரசு மேல் நிலைப் பள்ளி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பரமத்தி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி, ராசிபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி போன்ற பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ராசிபுரம் பள்ளியில் இயங்கி வந்த பெற்றோர் ஆசிரியர் கழகமும் கலைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications