சக ஊழியர்களிடம் லஞ்சம்-மருத்துவமனை ஊழியர் கைது
மதுரை: ஊதிய நிலுவைத் தொகை வழங்க தன்னுடன் பணியாற்றும் 86 சக ஊழியர்களிடமே தலா ரூ. 300 லஞ்சம் வாங்கிய மருத்துமனை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மதுரை திருநகரை அடுத்துள்ள ஆஸ்டின்பட்டி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 86 ஊழியர்களுக்கும் 6வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி நிலுவை தொகையின் ஒரு பகுதியான ரூ.18.56 லட்சம் வழங்கப்பட்டிருந்தது.
இதை இளநிலை உதவியாளர் சுப்பிரமணியன் ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். அப்போது அவர் ஒவ்வொரு ஊழியரிடமும் தலா ரூ.300 லஞ்சம் வசூலித்தார்.
இது குறித்து சில ஊழியர்கள் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதோடு சுப்பிரமணியத்திடம் இருந்த கணக்கில் வராத ரூ.17,400 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு டி.எஸ்.பி. குலோத்துங்க பாண்டியன் கூறுகையில், சோதனையின்போது பணியில் இருக்க வேண்டிய டாக்டர்கள் இல்லை. அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இளநிலை ஊழியர் சுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அவர்களையும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மின் இணைப்புக்கு லஞ்சம்-பொறியாளர் கைது:
இந் நிலையில் மதுரை திருமங்கலத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் இன்று காலை லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரெய்ட் நடத்தி மின் இணைப்பு தர ரூ. 500 லஞ்சம் வாங்கிய மின் உதவி செயற் பொறியாளரைக் கைது செய்தனர்.