தனி ஈழம் சாத்தியமல்ல, சுயாட்சியே சாத்தியம்-கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? அல்லது தமிழர்களை காப்பாற்றி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியமா? என்பதை யோசி்த்து தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நம்முடைய கருத்துக்களை நீக்குபோக்குவுடன் தெரிவிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம் என்றும் அவர் கூறினார்.

இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் அங்கு தமிழர்களுக்கு வாழ்வுரிமை பெற்றுத் தரவும், மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட அடிப்படை வசதிகளை வழங்குவது குறித்தும் விவாதிக்க சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்மீது, அதிமுக சார்பில் பன்னீர் செல்வம், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ராமசாமி ஆகியோர் பேசினர்.

இலங்கையில் தமிழர்களின் நிலைமை படுமோசமாக இருப்பதாகவும், திறந்தவெளியில் ஆடு, மாடுகளை போல் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள் அந்த மக்களுக்கு தேவையான உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க செய்ய வேண்டும் என்று கோரினர்.

மேலும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்களர்களை குடியேற்றும் முயற்சிகளை தடுத்து வடக்கு, கிழக்கு பகுதிகளை மீட்டு தமிழர்கள் முழு உரிமையுடன் சிங்களர்களுக்கு இணையான சமவாழ்வு வாழ்வதற்கு மத்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கூறுகையில்,

இன்று இலங்கைத் தமிழர் பிரச்சனையை அரசியல் ஆக்காமல் அனைத்து கட்சியினரும் ஒரே விதமான கருத்தை தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் நடைபெறும் பிரச்சனை என்பது சிங்களர்களுக்கும், தமிழ் இனத்திற்குமான போராட்டமாகும். 50 ஆண்டு காலமாக இலங்கை தமிழர் தலைவர் செல்வா, அமிர்தலிங்கம், குட்டிமணி, ஜெகன் காலம் முதல் போராட்டம் நடைபெறுகிறது.

இலங்கையில் உள்ள தமிழர்கள் சுதந்திரமாக வாழ வேண்டும். தமிழ் மொழி சீரழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக போராட்டம் நடைபெற்றது. இதற்காக தமிழீழம் அமைய வேண்டும் என்ற குரலும் எதிரொலித்தது.

இந்தியாவில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இதில் பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழீழம் என்கிற பிரிவினைக்கு ஆதரவு இல்லை. மாநில சுயாட்சி என்றஅளவில்தான் தீர்வு அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் கொள்கையாக இருந்து வந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இப்போது தமிழீழம்தான் தீர்வு என்று தனது நிலையை மாற்றிக் கொண்டுள்ளது.

பாமக கூட தமிழீழம்தான் தீர்வு என்று பேசி வந்தது. ஆனால் இன்று மாநில சுயாட்சி போதும் என்ற அளவிற்கு பேசி இருக்கிறார்கள். அதுதான் இப்போது முடியும். தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ்மொழிக்கு சம தகுதி, தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு இதற்காக நாம் போராடும் நிலைதான் தற்போது உள்ளது.

பேரறிஞர் அண்ணா திராவிட நாடு கோரிக்கையை முதலில் எழுப்பி பின்னர் அதை கைவிட்டு விட்டார். அதற்காக இந்த சபையிலேயே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் பாராட்டி பேசியுள்ளார். மக்கள் தலைவர்களாகிய நாம் மக்களை பாதிக்கக் கூடிய ஒரு பிரச்சனை உருவானால் அதற்கு மாற்று என சிந்தித்து எந்த வழியில் சென்றால் அது சரியாக இருக்கும் என தீர்மானித்து செயல்பட வேண்டும்.

அப்படித்தான் திராவிட நாடு கொள்கையை கைவிட்ட போதும் அதற்குரிய காரணம் அப்படியே இருக்கிறது என்று மத்திய அரசிடம் நாம் வலியுறுத்தியதன் விளைவாக இன்று மாநில அரசுகளை மதிக்கும் போக்கு மத்திய அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதே போல இலங்கையில் தமிழர்களை மதிக்கின்ற ஒரு அரசு அமைய வேண்டும்.

எதிர்காலத்தில் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து ஒரு தமிழர் அரசை அமைக்கும் நிலை உருவாகலாம். ஒரு காலத்தில் வெள்ளையர்கள் மட்டுமே அதிபராகலாம் என்று அமெரிக்காவில் இருந்த நிலை மாறி இப்போது கருப்பர் இனத்தை சேர்ந்த ஒபாமா அதிபராகி இருக்கிறார். இதே போல இலங்கையிலும் தமிழர்களின் அரசு அமைவதற்கு வெகு தூரம் இல்லை என்கிற நம்பிக்கையை நாம் பெற வேண்டும்.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதனால் என்னைப் போல இந்த உலகில் யாரும் மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது.

ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும் என்று இங்கு பேசப்பட்ட கருத்தை கருணாநிதி கேட்கவில்லை. இன்னும் அவர் ராஜபக்சேவுக்கு மரியாதை தருவதை பார்த்தீர்களா என்று பேசக்கூடும். அப்படி பேசுபவர்கள் அவர்களுடைய மனசாட்சியை எடுத்து வெளியில் வைத்து விட்டுத்தான் சொல்ல வேண்டும்.

தமிழர்களை காப்பாற்ற வேண்டும். அவர்களுடைய வாழ்வாதாரம் வளமிக்கதாக ஆக்க வேண்டும் என்பது முக்கியமா? அல்லது ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்துவது முக்கியமா? என்பதை நாம் சிந்தித்து பேச வேண்டும். அங்குள்ள தமிழர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்றால் அது சிங்கள அரசின் மூலம்தான் முடியும். அதற்காக இந்தியாவை நாம் வற்புறுத்த செய்ய வேண்டும்.

நம்முடைய குரல் உயர்ந்த அளவிற்கு மத்திய அரசின் குரல் உயர்த்தப்படவில்லை என்ற கருத்தை இங்கு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் பேசியதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. எனவே சிங்களர்களுக்கு எதிராக பேசி அவர்களை கோபமடைய செய்யக் கூடாது. சிங்கள பௌத்த துறவிகள் கூட நம் மீது கோப அக்னியை வீசக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

எனவேதான் இலங்கை தமிழர்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாத வகையில் நீக்குபோக்குவுடன் நம்முடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். இலங்கை பிரச்சனையை பொறுத்தவரை ஆதி முதல் அந்தம் வரை முழுமையாக தெரிந்தவன் நான். இதை 'பண்டாரக வன்னியன்' என்ற நாவல் மூலம் நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

இலங்கை தமிழர்களுக்கான நிவாரணப் பொருட்கள் அவர்களை சென்றடைவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஏற்கனவே செஞ்சிலுவை சங்கம் மூலம் தமிழக அரசோ, மத்திய அரசோ நிவாரண உதவிகளை அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. தற்போது வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களும் பாதிக்கப்பட்ட தமிழர்களை சென்றடைவதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. நிச்சயம் தமிழர்களிடம் அந்த பொருட்களை கொண்டு சேர்க்கும்.

இலங்கை தமிழர்களுக்கு தற்போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தொண்டைமான் மற்றும் அவருடைய மகன் ஆகியோர் என்னை வந்து சந்தித்திருக்கிறார்கள். ஒரு குழு வந்து இலங்கையில் பார்வையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர். மத்திய அரசின் அனுமதி பெற்று உரிய அதிகார அழைப்பின் பேரில்தான் அங்கு செல்ல முடியும் என்று நான் தெரிவித்திருக்கிறேன்.

தற்போது இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய வழிவகைகளை சிங்கள அரசு மூலம் நீங்கள் செய்யுங்கள். நாங்கள் துணை நிற்கிறோம். நிச்சயம் உரிய நல்ல பலன் கிடைக்கும் என்று அவர்களிடம் நானே பேசியிருக்கிறேன். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். அமைச்சர்கள் மூலமாகவும் தெரிவித்திருக்கிறேன். நானே தொலைபேசி மூலமாகவும் பேசியிருக்கிறேன். நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும். எப்போதும் இதே போல தமிழர்களாக ஒற்றுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்றார் கருணாநிதி.

இதையடுத்து பேசிய ஜி.கே.மணி இலங்கை விஷயத்தின் தனது கட்சியின் நிலையை விளக்கினார். அவர் கூறுகையில் பாமகவைப் பொறுத்தவரை தமிழீழம்தான் இறுதி தீர்வு என்பதில் உறுதியாக இருக்கிறோம். இடைக்காலத் தீர்வாக தமிழர்களுக்கு மாநில சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+