ஈவ்டீசிங்:3 மாணவர்கள் சஸ்பெண்ட்-ஒருவர் கைது
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் ஈவ்டீசிங் செய்த பள்ளி மாணவர்கள் மூன்று பேரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அஞ்சுபிரியா (18). இவர் தலைக்காடு அரசு மேல்நிலப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவர் பள்ளி செல்லும் போதும், வரும் போதும் திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் வெற்றிவேல், கணேசன், ரஞ்சித் ஆகிய மூன்று பேரும் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த அஞ்சுபிரியா இது குறித்து தனது பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து கிண்டல் செய்த மாணவர்களை அஞ்சுபிரியாவின் பெற்றோர்கள் தட்டிக் கேட்க ஆவேசம் அடைந்த வெற்றிவேல், கணேசன், ரஞ்சித் ஆகிய மூன்று பேரும் அஞ்சுபிரியா வீட்டில் புகுந்து தகராறு செய்துள்ளனர்.
இது குறித்து அஞ்சுபிரியாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசன் என்ற மாணவனை கைது செய்தனர். மற்ற இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட அந்த மூன்று மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் 20 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது.