சென்னை விமான நிலைய விபத்து-தொழிலாளி பலி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட விபத்து ஒன்றில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1808 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டம் வரும் 2011ம் ஆண்டு ஆகஸ்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தி விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக உயர் கோபுர மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை செய்யும் பொருட்டு கமலக்கண்ணன், கமல் என்னும் இரண்டு வாலிபர்கள் கிரேன் மூலம் மேலே ஏற்றப்பட்டனர்.
கிரேன் கேபிளை இடுப்பில் கட்டியவாறு அவர்களை விளக்குகளை பொருத்த முனைந்தனர். அப்போது அந்த கேபிள் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதையடுத்து அந்த இரு வாலிபர்களும் கோபுரத்திலிருந்து கீழே விழுந்தார்கள்.
இருவரும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதில் கமலக்கண்ணனுக்கு தலையில் பயங்கரமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த கமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் கேபிள் எப்படி அறுந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.