சந்தேகம்-கர்ப்பிணியை உயிரோடு கொளுத்திய கணவன்
சேலம்: நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை உயிரோடு கொளுத்திய மகாராஷ்டிரா வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவரது மனைவி வித்யா (21). இவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டை மசூதி தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
சந்தோஷ் வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2007ல் திருமணம் நடந்தது. தற்போது வித்யா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மனைவி வித்யாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சந்தோஷ் அவரை அடிக்கடி அடித்தும் உதைத்தும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்றும் இதே போல் மனைவியுடன் சந்தோஷ் சண்டை போட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த சந்தோஷ், தூங்கிக் கொண்டிருந்த வித்யா மீது அதிகாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறித் துடித்த வித்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சந்தோசை தேடி வருகின்றனர்.