6 மாவட்டங்களில் புதிய தாலுகாக்கள்!
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிய தாலுகாக்கள் உருவாக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் பெரியசாமி அறிவித்துள்ளார்.
சட்டசபையில் வருவாய்த் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் பேசுகையில்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகாவை இரண்டாகப் பிரித்து உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் தாலுகாக்கள் உருவாக்கப்படும். புதிதாக உருவாக்கப்படும் உடுமலைப்பேட்டை, வருவாய்க் கோட்டத்தின் கீழ் செயல்படும்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தாலுகா மூன்றாகப் பிரிக்கப்படும். தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு தாம்பரம் தாலுகாவும், ஆலந்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஆலந்தூர் தாலுகாவும், சோழிங்கநல்லூரை தலைமையிடமாகக் கொண்டு சோழிங்கநல்லூர் தாலுகாவும் உருவாக்கப்படும்.
தற்போது செங்கல்பட்டு வருவாய்க் கோட்டத்தில் உள்ள தாம்பரம் தாலுகா இனி தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய தாலுகாக்களை உள்ளடக்கிய புதிய தாம்பரம் வருவாய்க் கோட்டமாக மாற்றப்படும்.
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தாலுகா இரண்டாக பிரிக்கப்படும். அம்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு அம்பத்தூர் தாலுகாவும், மாதவரத்தை தலைமையிடமாகக் கொண்டு மாதவரம் தாலுகாவும் உருவாக்கப்படும்.
நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா இரண்டாகப் பிரிக்கப்படும். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு மயிலாடுதுறை தாலுகாவும், குத்தாலத்தை தலைமையிடமாகக் கொண்டு குத்தாலம் தாலுகாவும் உருவாக்கப்படும். கடலூர் மாவட்டம் கடலூர் தாலுகாவை இரண்டாகப் பிரித்து குறிஞ்சிப்பாடியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய தாலுகா உருவாக்கப்படும்.
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா இரண்டாகப் பிரிக்கப்படும். கடவூர் என்ற புதிய தாலுகா உருவாக்கப்படும். இது, தரங்கம்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் என்றார்.