காந்தி, இந்திரா, ராஜீவ் என 3 காந்திகளைக் கொடுத்துதான் வென்றோம் - காங். எம்.எல்.ஏ
சென்னை: எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல நாங்கள் காந்தியைக் கொடுத்துதான் வென்றோம். ஆனால் அவர்கள் நினைக்கும் காந்தி அல்ல. இந்திரா மற்றும் ராஜீவ் ஆகியோரை நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் நாங்கள் என்று கூறி சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தினார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தண்டபாணி.
நேற்று சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ தண்டபாணி பேசுகையில், எதிர்க்கட்சிகள், நாங்கள் 'காந்தியை' (ரூபாய்) காட்டியும், 'காந்தியை' கொடுத்தும் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்கிறார்கள். அது உண்மைதான் என்று கூறி நிறுத்தினார்.
இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குழப்பமடைந்தனர்.
தொடர்ந்து பேசிய தண்டபாணி, 1948-ல் காந்தியை பலி கொடுத்தோம். அதன்பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை பலி கொடுத்தோம். ஆகவே, காந்தியை கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றோம்.
சிறப்பான ஆட்சி அமைய, சோனியா தலைமையிலான அணிக்கு வாக்களியுங்கள் என்று சோனியா காந்தியைக் காட்டித்தான் வாக்கு கேட்டோம். ராகுல் காந்தி, குடிசைகளில் தூங்கி எளிய முறையில் பிரசாரம் செய்தார். அந்த காந்தியையும் காட்டி வாக்கு கேட்டோம். எனவே, எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மைதான் என்று கூறி நிறுத்திய பின்னரே காங்கிரஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
தண்டபாணியின் தடாலடி அத்துடன் நிற்கவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து முதல் அமைச்சர் என்று கூறி திமுகவினரை திகிலடைய வைத்தார். பின்னர் அவரே அதற்குரிய விளக்கத்தையும் கொடுத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக அமைச்சராக ஆகியிருப்பதால்தான் அவரை 'முதல்' அமைச்சர் என குறிப்பிட்டேன் என்று கூறவே தண்டபாணியால் ஏற்பட்ட சலசலப்பு அடங்கியது.












Click it and Unblock the Notifications