ஐஐடிகளில் மருத்துவம், சட்டப் படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும் - சிபல்
டெல்லி: ஐஐடிகளில் மருத்துவம், சட்டம் போன்ற படிப்பையும் கொண்டு வர வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
கல்வீச் சீரமைப்பு தொடர்பாக பல்வேறு யோசனைகளை தெரிவித்து வருகிறார் சிபல். பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து விட்டு, நாடு முழுவதும் ஒரே கல்வி வாரியத்தின் கீழ் 12ம் வகுப்புத் தேர்வை பொதுத் தேர்வாக நடத்தலாம் என அவர் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்தார்.
இதற்கு பெரும் எதிர்ப்பும், பரவலான ஆதரவும் காணப்படுகிறது.
இந்த நிலையில் ஐஐடிகளில் சீரமைப்புக் கொண்டு வர வேண்டும் என சிபல் கருத்து தெரிவித்துள்ளார். அங்கு தொழில்நுட்பப் படிப்பைத் தவிர சட்டம், மருத்துவம் ஆகியவற்றையும் அமல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று ஐஐடி இயக்குநர்களின் கூட்டம் நடந்தது. அதில் பேசிய சிபல், தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த படிப்புகளோடு நின்று விடாமல் பல்வேறு வகையான படிப்புகளையும் ஐஐடிகளில் கொண்டு வர வேண்டும். இதுதொடர்பான சாத்தியக்கூறுகளை ஐஐடிகள் யோசிக்க வேண்டும்.
இந்த விரிவாக்கத்தை, பிற துறைகளையும் ஈடுபடுத்துவதை எப்படிச் செய்யலாம் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும். ஐஐடி கல்வி நிறுவனங்கள் மிகச் சிறப்பாக உள்ளன. காரணம், உங்களிடம் வருவோர் எல்லாம் மிகச் சிறந்த மாணவர்கள் என்பதால். எனவே அவர்களுக்கு நீங்கள் மிகச் சிறந்த கல்வியை அளிக்க வேண்டும்.
ஒரு எல்லைக்கோட்டுக்குள் நின்று விடாமல் ஐஐடி நிறுவனங்கள் விஸ்தரிப்பு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.
ஐஐடி நிறுவனங்களில் மருத்துவப் பள்ளி, சட்டப் பள்ளி, சமூக அறிவியல் பள்ளி மற்றும் இலக்கியம் என பல துறை படிப்புகளை அறிமுகப்படுத்தலாம்.
எதிலும் புதுமை இருக்க வேண்டும். தற்போது உள்ள 14 ஐஐடிகளும் புதுமையுடன் கூடிய தனிப் பல்கலைக்கழகங்களாக ஏன் மாறக் கூடாது என்றார் சிபல்.
சமீபத்தில்தான் ஐஐடி கல்வி நிறுவனங்களை பல்துறை படிப்புகளைக் கொண்ட கல்வி நிறுவனங்களாக மாற்றலாம் என அரசு நியமித்த கமிட்டி ஒன்று பரிந்துரைத்தது. இந்தப் பின்னணியில் சிபல் கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications