திருப்பதியில் பக்தர்களுக்கு தேவஸ்தானம் டீ, காபி
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான தரிசிக்க வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு இலவச டீ, காபி வழங்க திருப்பதி, திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
பணக்கார கடவுளான திருப்பதி வெங்கடேஸ்வர பெருமானை தரிசிக்க தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருகின்றனர். பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருவதால், தற்போது ஆன்-லைன் மூலம் பதிவு செய்து செல்லும் முறைகளும் நடைமுறைக்கு வந்துள்ளன.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை திருப்பதி, திருமலை தேவஸ்தானம் சிறப்பாக செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாத இறுதியில் இந்த தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பதவியேற்ற கிருஷ்ண ராவ், பக்தர்களின் குறைகளை போக்கி வருகிறார்.
இதற்காக பக்தர்களுடன், பக்தர்களாக சென்று அவர்களது குறைகளை கேட்ட வருகிறார். நேற்று முன்தினம் அவர் இலவச தரிசன வரிசையில் பக்தர்களோடு இணைந்து சுவாமி தரிசனத்துக்கு சென்றார். சுமார் 12 மணி நேரம் பக்தர்களுடன் சென்ற அவர் அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
அப்போது அவரிடம் சில பக்தர்கள் தாங்கள் காத்திருக்கும் சமயத்தில் டீ, காபி வழங்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இதையடுத்து அதற்கு விரைவில் ஏற்பாடு செய்வதாக கூறினார். இதுவரை தரிசனத்துக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு பால் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. விரைவில் டீ, காபி கிடைக்கும்.