ஊராட்சித் தேர்தலில் இடதுசாரிகளுக்கு அடி - காங்.திரினமூல் கூட்டணி அபார வெற்றி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளுக்கு பெரும் அடி விழுந்துள்ளது. 16 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் 13 நகராட்சிகளை காங்கிரஸ் - திரினமூல் காங்கிரஸ் கூட்டணி வென்றது.
மேற்கு வங்கத்தி்ல் உள்ள 16 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 13 இடங்களை காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. வெறும் 3 இடங்களை மட்டுமே இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளன. முன்பு மொத்தம் 10 இடங்களை இடதுசாரிகள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு மொத்தம் 15 மாநகராட்சிகள் இருந்தன. சமீபத்தில் புதிதாக டாங்குனி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
காங்கிரஸ் கூட்டணி வென்ற இடங்களில் ஒன்றான அசன்சோல் மாநகராட்சி, இடதுசாரிகளின் கோட்டையாகும். ஆனால் இங்கு காங்கிரஸ் கூட்டணி வென்று விட்டது.
இதேபோல சில கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மக்கள் பெற்ற வெற்றியாகும் என்று கருத்து தெரிவித்துள்ள திரினமூல் தலைவர் மமதா பானர்ஜி, இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கும் இடதுசாரி கூட்டணி அரசு, உடனடியாக பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.