நாடாளுமன்றத்தில் காங்.கை 'வறுத்து எடுத்த' திமுக!
டெல்லி: அமைச்சரவையில் கலந்தாலோசிக்காமலும் கூட்டணிக் கட்சிகளுடன் விவாதிக்காமலும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியதற்கு நாடாளுமன்றத்தில் திமுக கடும் கண்டனம் தெரிவித்தது.
கடும் கண்டனம் தெரிவித்து டி.ஆர்.பாலு கடுமையாகப் பேச, அதற்கு எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்பு தெரிவிக்க, இதை சற்றும் எதிர்ப்பார்க்காத காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இன்று காலை பட்ஜெட் கூட்டத் தொடர் கூடியவுடன் பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, பெட்ரோல்-டீசல் விலையை இப்படி உயர்த்தியது கடும் கண்டனத்துக்குரியது. இது குறித்து அமைச்சரவையிலும் விவாதிக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளுடனும் பேசவில்லை.
இந்த அரசை திமுக, திரிணமூல் என பல கட்சிகள் ஆதரிக்கின்றன. ஆனால் யாருடனும் விலை உயர்வு குறித்துப் பேசவில்லை. இப்படி ஒருதலைப்பட்சமாக விலையை உயர்த்தியது ஏற்கத்தக்கதல்ல. மேடம் சோனியாவும் பிரதமரும் ஏன் இப்படிச் செய்தார்கள் என்று தெரியவி்ல்லை என்றார்.
திமுக இப்படிப் பேசும் என்று எதிர்பார்க்காத காங்கிரஸ் எம்பிக்கள் அதை அதிர்வுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது தேனி காங்கிரஸ் எம்பி ஜே.என்.ஆருண் எழுந்து ஏதோ சொல்ல முயன்றார்.
ஆனால், அவரை பிற உறுப்பினர்கள் அமரச் சொல்லிவிட்டனர்.
பாலுவின் இந்தப் பேச்சை பாஜக, இடதுசாரிக் கட்சிகளின் எம்பிக்கள் மேஜைகளைத் தட்டி வரவேற்க சோனியா, பிரதமர், சிதம்பரம் ஆகியோர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் எம்பி குருதாஸ் தாஸ்குப்தா, மத்திய அரசை காய்ச்சி எடுத்துவிட்டார். அவர் பேசுகையில்,
நாடாளுமன்றம் காலையில் கூடுகிறது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன் பெட்ரோல் விலையை உயர்த்தி அறிவிப்பை வெளியில் வெளியிடுகிறீ்ர்கள். இதன்மூலம் நாடாளுமன்றத்துக்கு நீங்கள் தரும் மரியாதை நன்றாகவே புரிகிறது.
மத்திய அரசின் இந்தச் செயலுக்கு மன்னிப்பே கிடையாது. தனது செயலுக்காக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க் கட்சியினரும் மத்திய அரசை வாட்டி எடுக்கவே நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து சபாநாயகர் மீரா குமார் பல முறை முயன்றும், அமைதி ஏற்படவிலலை. இதையடுத்து அவையை 20 நிமிடம் ஒத்திவைத்தார்.
ஆனால், மீண்டும் அவை கூடியதும் எதிர்க் கட்சிகளின் அமளி ஓயவில்லை. இதையடுத்து மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதன் பின்னர் அவை கூடியதும் மீண்டும் அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.