ரயிலில் வெடிகுண்டு-புரளி கிளப்பிய என்ஜினியர் கைது
சென்னை: சென்னை-ஹவுரா ரயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளியை பரப்பிவிட்ட சென்னை என்ஜினியரை போலீசார் கைது செய்தனர். ரயில் தாமதமாக வந்த ஆத்திரத்தில் புரளியை கிளப்பிவிட்டதாக அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை-ஹவுரா ரயில் தற்போது திருச்சி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மாலை 4.00 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.10 மணிக்கு சென்னை வந்து அங்கிருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பும்.
ஆனால், நேற்று முன்தினம் இந்த ரயில் சுமார் இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்தது. இதையடுத்து ரயிலுக்கு காத்திருந்த பயணிகள் எரிச்சலடைந்தனர். இவர்களில் கொல்கத்தாவுக்கு செல்லவிருந்த யோகேஷ் என்ற 29 வயது இளைஞரும் ஒருவர்.
சென்னையை சேர்ந்த இவர் கொல்கத்தாவில் தான் படித்த மரைன் என்ஜினியரிங் கல்லூரிக்கு சென்று பட்டம் வாங்குவதற்காக ரயிலில் முன்பதிவு செய்திருந்தார். ரயில் தாமதமானதால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் சென்று பட்டம் வாங்க முடியாமல் போய்விட்டதாக கருதிய இவர் ரயில் வண்ணாரப்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது கீழே குதித்தார்.
ஓடும் ரயிலில் எஸ் 6 பெட்டியில் இருந்து யோகேஷ் சூட்கேசுடன் குதிப்பதை பார்த்த ரயில்வே கேட் ஊழியர் என்ன என்று அவரிடம் விசாரித்தார். அப்போது யோகேஷ் தான் ரயிலில் ஒரு மர்ம பார்சலை பார்த்ததாகவும், அது வெடிகுண்டாக இருக்கும் என்ற பயந்து வந்து இறங்கிவிட்டதாக தெரிவித்தார்.
அந்த ரயில்வே கேட் ஊழியர் கொருக்கு பேட்டை ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ரயில்வே போலீசார் மற்றும் மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் ரயில் முழுவதையும் கடுமையாக சோதனை மேற்கொண்டனர். சுமார் 3 மணி நேரம் போராடிய போதும் அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. யோகேஷ் வந்த எஸ் 6 பெட்டியில் மட்டும் ஒரு மர்மமான பார்சல் இருந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அதில் பழைய துணியும், டிப்பன் பாக்சும் இருப்பதையும் கண்டு ஏமந்தனர்.
இறுதியில் அந்த வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் புரளியை பரப்பிபய யோகேசை கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில் யோகேஷ் கூறுகையில்,
நான் சென்னை அமைந்தகரை எம்எச் காலனியில் வசிக்கிறேன். என் தந்தை ஏகாம்பரம். தாய் முனியம்மாள். எனக்கு திருமணம் முடிந்து தேவி என்ற மனைவி இருக்கிறார். தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.
கொல்கத்தாவில் கப்பல் துறையில் என்ஜினீயரிங் படித்தேன். அதற்கான சான்றிதழ் பெற கொல்கத்தா செல்வதற்காக எழும்பூர் வந்தேன். ஆனால், ரயில் மிகவும் தாமதமாக வந்ததால் சரியான நேரத்துக்கு சென்று சான்றிதழ் வாங்க முடியாதே என்ற கோபத்தில் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறினேன் என்றார்.
ஏற்கனவே தாமதாக வந்த ரயில் இந்த புரளி காரணமாக மேலும் மூன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது.