பொருளாதார மண்டலம் அமைக்க சீனாவுக்கு இடம் தரும் இலங்கை
கொழும்பு: சீனாவுக்காக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தனி இடத்தை ஒதுக்கியுள்ளது இலங்கை.
இலங்கையில், வெளிநாடு ஒன்றுக்கு இவ்வளவு பெரிய தனி இடம் ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாம்.
சமீபத்தில் முடிந்த விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை வெல்ல சீனா பெருமளவில் உறுதுணையாக இருந்தது. இதற்குப் பரிசளிப்பது போல இந்த பொருளாதார மண்டலத்தை அளிக்கிறது இலங்கை.
கொழும்பிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிரிகாமா என்ற இடத்தில் இந்த பொருளாதார மண்டலம் அமையவுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹுய்சென் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இங்கு கிளை பரப்பவுள்ளது. 33 ஆண்டுகள் குத்தகையாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹூய்சென் நிறுவனம் சாலைகள் அமைப்பது, மின்சார வசதி, கழிவு நீர் வசதி ஆகியவற்றை இந்த மண்டலத்தில் செய்ய 28 மில்லியன் டாலர்களை செலவிடவுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிவடையும்.
தமிழர் பகுதிகளிலும் பொருளாதார மண்டலங்கள்..
இதேபோல போரினால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை, கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் இதேபோன்ற பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.