பெரியாறு அணை: முதல்வர்கள் மட்டத்தில் பேசி தீர்வு காண அச்சுதானந்தன் வலியுறுத்தல்
டெல்லி: தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முல்லைப் பெரியாறு அணைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், கேரள முதல்வர் அச்சுதானந்தன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா தேவையில்லாமல் முரண்டு பிடித்து வருகிறது. அணை நன்றாக உள்ள நிலையிலும், அது இடியப் போகிறது, லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகப் போகின்றன என்று தேவையில்லாமல் மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறார்கள்.
அங்கு புதிய அணை கட்ட முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது கேரளா. இந்த நிலையில், முதல்வர் அச்சுதானந்தன் நேற்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் முறைப்படி கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை மூடி வி்ட்டு புதிய அணை கட்ட அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதைப் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து முதல்வர் கருணாநிதி சொல்லப் போகும் வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது.
தற்போது உள்ள அணை மிகவும் பழமையாகி விட்டது. அபாயகரமான நிலையில் உள்ளது. மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கேரளாவின் இந்தக் கவலை குறித்து தமிழக அரசு கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பதுதான் வேதனையைத் தருகிறது.
சமீப காலமாக அணையில் நிறைய விரிசல்கள் ஏற்பட்டன. நீர்க் கசிவும் அதிக அளவில் உள்ளது. மேலும் அணை உள்ள பகுதி நில நடுக்கத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியில் அமைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஐஐடி நிபுணர்களே இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்தெல்லாம் பேசி விவாதித்து சுமூக முடிவை எடுக்க பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அச்சுதானந்தன்.
எம்.பிக்களுக்கு புக் கொடுக்கும் கேரளா...
இதற்கிடையே, புதிய முல்லைப் பெரியாறு அணை ஏன் தேவை என்பதை விளக்கி புத்தகமாக்கி அதை கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்களுக்கு வழங்கவுள்ளதாம் கேரள அரசு. இதை வைத்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புமாறும் அது கோரியுள்ளது.