அருணா கொலை-முக்கிய நபரை ஆஜர்படுத்த உத்தரவு!
மதுரை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முக்கிய நபரை ஜூலை 9 ம் தேதி ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது நண்பர் பொன்ராஜூடன் வாக்கிங் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜாஸ் கல்வி நிலையங்களின் தலைவர் எஸ்.ஏ. ராஜா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் அழகர், பாலா ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், வேல்துரைக்கு மூன்று ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது. எஸ். ஏ. ராஜா, கண்ணன் உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தூக்கு தண்டனையை எதிர்த்து அழகர், ராஜா இருவரும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதே போல 6 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி பானுமதி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் வக்கீல் வைத்து கொள்ளவில்லை. ஆனால், மற்றவர்கள் தவிர அனைவருக்கும் வக்கீல்கள் ஆஜராயினர்.
இதனால் கண்ணனை ஜூலை 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் நெல்லை போலீசாருக்கு உத்தரவிட்டனர்.