4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கியது ஆணையம்
கோவை: தொண்டாமுத்தூர், இளையாங்குடி, பர்கூர், கம்பம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு திமுக, அதிமுக என மாறி மாறிப் போய்ச் சேர்ந்து வி்ட்டனர். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
இதுதொடர்பான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் உமாநாத், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஜெயஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் மூர்த்தி, ஆர்.டி.ஓ.க்கள் பாலசந்திரன், அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நரேஷ்குப்தா பேசுகையில்,
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இடைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
தொண்டாமுத்தூர் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 240. இதில் ஆண்கள் 1 லட்சத்து 73 ஆயிரத்து 270. பெண்கள் 1 லட்சத்து 67 ஆயிரத்து 970.
கோவை மாவட்டத்தில் ஏராளமான குடும்ப அட்டைகள் போலியானது என தெரியவந்துள்ளது. வாக்குப்பதிவின் போது குடும்ப அட்டையை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறிய கருத்துக்கு இது வலு சேர்ப்பதாக உள்ளது.
தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், பர்கூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் என்றார் குப்தா.