இது கோயில்களை மூட முதல்படி: ராம. கோபாலன்
சென்னை: கோயில் நிலங்களை அரசின் பிற துறைகளுக்கு விற்கும் செயல் கோயில்களை இழுத்து மூடுவதற்கு முதல்படி என்று இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
பயன்படாத கோயில் நிலங்களை அரசின் பிற துறைகளுக்கு விற்க முடிவு செய்துள்ளதாக சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து அறநிலையத்துறைக்குப் பயன்படாத கோயில் நிலங்களை அரசின் பிற துறைகள் சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
இது கோயில்களை இழுத்து மூடுவதற்கு முதல்படி. எனவே இந்த முயற்சியை இந்து அறநிலையத்துறையும், தமிழக அரசும் கைவிட வேண்டும். இது தொடர்ந்தால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.
வேதாரண்யம் கோயிலில் கொள்ளை:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் உண்டியலை உடைத்து, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலில் அன்னதானம் செய்வதற்கான உண்டியல் உள்பட நேர்த்திக் காணிக்கை செலுத்தும் 7 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும்.
இந் நிலையில் நேற்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டபோது துர்க்கை அம்மன் சன்னதியிலிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில் நாணயங்கள் மட்டுமே மீதம் இருந்தன.
தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.