எனது அரசியல் வாரிசு ஒரு தலித்தாகத்தான் இருப்பார்-மாயாவதி
லக்னோ: எனக்கு பின், எனது வாரிசாக உத்தரப் பிரதேச முதல்வராக வரக் கூடியவரும் ஒரு தலித் ஆக தான் இருப்பார் என அம்மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி., எம்எல்ஏ மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கூட்டம் நேற்று லக்னோவில் நடந்தது. இதில் கட்சியின் தலைவரும், உத்தர பிரேதச மாநில முதல்வருமான மாயாவதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
அடுத்த தேர்தலில் நான் பிரதமராகிவிட்டால் யாரை உத்தர பிரதேச முதல்வராக தேர்வு செய்வது என்பது தொடர்பாக கட்சியில் பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.
கட்சியின் பொது செயலாளர் சதிஷ் மிஸ்ரா, நஷீம் சித்திக் மற்றும் சுவாமி பிரசாத் மெளரியா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் நான் அனைவருக்கும் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லி கொள்ள விரும்புகிறேன். கட்சியின் முக்கிய உறுப்பினரான சதிஷ் மிஸ்ரா உள்ளிட்ட முக்கிய தலைவர்களுக்கு நல்ல பதவிகள் கொடுக்கப்படும். ஆனால், எனக்கு அடுத்து உத்தர பிரதேச முதல்வராக வரக்கூடியவர் ஒரு தலித் ஆக தான் இருப்பார்.
சமுதாய ஒருங்கிணைப்பில் அதிக கவனம் செலுத்தி கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருந்த சதிஷ் மிஸ்ராவுக்கு புதிய பதவி ஒன்று தரவிருக்கிறேன். அது என் மீதும், மாநில அரசின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை எதிர்த்து போராடும் பணி.
அடுத்து உத்தர பிரதேத்தில் நடக்கவிருக்கும் 13 சட்டசபை, ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலுக்கு தொண்டர்கள் தயாராக வேண்டும். தலித் மக்களை தவறான பாதையில் கொண்டு செல்லும் காங்கிரசிடம் தொண்டர்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் மாநிலங்களவை உறுப்பினர் பாலிஹரி பாபு கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் என்றார் மாயாவதி.