எந்த அமைச்சரும் நீதிபதி ரகுபதியுடன் பேசவில்லை - தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்
ஜூன் 29ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ஆகியோரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது, அவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தனக்கு நெருக்குதல் கொடுப்பதாகவும், இதற்குப் பகிரங்க மன்னிப்பு கோராவிட்டால் பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும் எனவும் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் பரபரப்பு எழுந்தது. யார் அந்த அமைச்சர் என்று விவாதங்கள் எழுந்தன. மத்திய அமைச்சர் ராஜாதான் அவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் ராஜா இந்தப் புகார்களை மறுத்திருந்தார்.
ஆரம்பத்தில் இந்த சம்பவத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கண்டித்திருந்தார். நீதித்துறையில் யாரும் குறுக்கிடக் கூடாது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீதிபதி ரகுபதியை எந்த மத்திய அமைச்சரும் தொடர்பு கொள்ளவில்லை என்று கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளதால் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் நீதிபதி ரகுபதியைத் தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்டேன்.
நீதிபதி ரகுபதியை எந்த மத்திய அமைச்சரும் தொடர்பு கொள்ளவில்லை. பதிலாக சம்பந்தப்பட்ட வக்கீலைத்தான் நீதிபதி கண்டித்துள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கில், தனக்கு நெருக்குதல் தரப்படுவதாகவும், இதுகுறித்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பிரதமருக்கு இதுகுறித்து எழுதப் போவதாகவும் சம்பந்தப்பட்ட வக்கீலிடம்தான் கூறியிருந்தார் நீதிபதி ரகுபதி என்று இப்போது விளக்கியுள்ளார் கே.ஜி.பாலகிருஷ்ணன்.
தலைமை நீதிபதியின் இந்தப் புதிய விளக்கத்தால் நீதிபதி ரகுபதியை மத்திய அமைச்சர் மிரட்டியதாக கூறப்படும் சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.