செங்கோட்டை-புனலூர் அகலப் பாதைப் பணி விரைவில் தொடக்கம்
நெல்லை: செங்கோட்டை- புனலூர் இடையிலான அகலப் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மதுரை இடையே இருவழிபாதை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை விரைவில் ஆரம்பமாகிறது என்று தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகள் மற்றும் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் 8 கோடியில் மூன்று பீட் லைன் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய தென்னக ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகள் 200 கோடியில் நடந்து வருகிறது. இதில் சேரன்மகாதேவி, கீழ் கடையம், அம்பை, பாவூர்சத்திரம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் புதிகாக கட்டப்படுகின்றன. மற்ற ரயில்வே ஸ்டேஷன்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் வரும் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டை-புனலுருக்கு இடையே அகல ரயில் பாதை பணிகள் விரைவில் துவக்கப்படும். இந்த வழித்தடத்தில் உள்ள ஆரியங்காவு உள்ளிட்ட 4 குகைகளையும் விரிவுப்படுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதற்காக சிறப்பு சிலிப்பர் கட்டை கொண்டு தண்டவாளம் போடப்படுகிறது. மேலும் குகைகளை விரிவுபடுத்தும்போது அதனை கான்கீரிட் மூலம் உறுதிபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இருவழி ரயில் பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் வரை 103 கிமீ தூரத்திற்கு 400 கோடியில் இருவழிபாதையும், மின்மயமாக்குதல் பணியும் நடந்து வருகிறது.
தொடர்ந்து விழுப்புரம்-திண்டுக்கல் வரை 273 கிமீ தூரத்திற்கு ரூ.1,400 கோடியில் இருவழிப்பாதை, மின்மயமாக்குதல் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடையும் என்றார் அவர்.