வெடி தொழிற்சாலை விபத்து-மபி.யில் 30 பேர் பலி?
போபால்: மத்திய பிரதேசத்தில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் வரை பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. இதில் இரண்டு தொழிற்சாலைகள் தரைமட்டமாகிவிட்டன.
மத்திய பிரதேச மாநிலம் சிங்கிரவ்ளி மாவட்டத்தில் பைர்கான் தொழிற்பேட்டை உள்ளது. இங்கிருந்த ஐடியல் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையி்ல் சுரங்க வேலைகளுக்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று பின்னிரவில் இந்த வெடிபொருள் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து வெடித்து சிதறியது. பின்னர் அது தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி பெரும் கோர விபத்தாக மாறியது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். இதில் விபத்தில் அந்த தொழிற்சாலை சின்னாபின்னமானது. பலர் இடிபாடுகளுக்கு சிக்கி கொண்டனர்.
மேலும், அருகிலிருந்த ராஜஸ்தான் வெடிபொருள் தொழிற்சாலைக்கு இது பரவியது. இதில் அந்த நிறுவனம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதை தவிர அருகிலிருந்த 15 நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட வெடி சத்தம் பல கிமீ., தூரத்துக்கு அப்பால் இருந்தவர்களுக்கும் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100க்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications