வங்கதேசத்திலிருந்து கடத்தப்படும் கொசு வலையால் தொழில் பாதிப்பு
திருச்சி: வங்கதேசத்திலிருந்து அதிக அளவில் கடத்தப்பட்டு வட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கொசு வலைகளால், உள்ளூரில் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக திருச்சி மலைக்கோட்டை நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் கெளஸ் பெய்க் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு விடுத்துள்ள கோரிக்கை..
வங்கதேசத்திலிருந்து பெருமளவில் கொசு வலைகள் தமிழகத்திற்குக் கடத்தி வரப்புகின்றன. இதன் காரணமாக உள்ளூர் கொசு வலை தயாரிப்புப் பிரிவுகள் பெரும் நசிவைச் சந்தித்து வருகின்றன.
கரூர், சேலம் மாவட்டங்களில் கொசு வலை தயாரிப்பு பெரும் தொழிலாக நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கொசு வலைகள் வட இந்தியாவுக்கு விற்பனையாகிறது.
இந்த நிலையில் வங்கதேச கொசு வலைகள் அங்கிருந்து நம் நாட்டுக்குக் கடத்தி வரப்படுகின்றன. மிகக் குறைந்த விலையில் இவற்றை வட மாநிலங்களில் விற்பனை செய்கிறார்கள். இதனால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, எங்களது தொழிலும் பாதிக்கப்படுகிறது.
மேலும் உள்ளூர் தொழில் நசிவடைவதோடு, தொழிலாளர்கள் பெருமளவில் வேலையிழப்பை சந்திக்கும் நிலையும் ஏர்படுகிறது.
ஏற்கனவே கச்சா பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வங்கதேச கடத்தல் கொசுவலையால் எங்களது நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
எனவே இந்த கொசுவலை கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பெய்க்.