சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில் தீ!
சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள புதிய எம்.எல்.ஏ. விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சட்டசபை கூட்டம் நடைபெறுவதால் அங்கு ஏராளமான எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள நிலையில் விடுதியின் சி பிளாக்கின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அங்கிருந்த வயர்கள், கேபிள்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்ததும் திருவல்லிக்கேணியில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
சனிக்கிழமையும் சட்டசபை:
காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வராஜின் மறைவைத் தொடர்ந்து நேற்று சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டதால் சனிக்கிழமை சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ செல்வராஜ் மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து நேற்று இரங்கல் தெரிவித்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சிகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டசபையின் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரல் நேற்று வெளியிடப்பட்டது.
6-ந் தேதி (திங்கட்கிழமை) நடப்பதாக திட்டமிடப்பட்டு இருந்த நிகழ்ச்சிகள் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை; வணிகவரி மற்றும் பதிவுத் துறை; சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை; தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித் துறையின் மானியக் கோரிக்கை விவாதம் மற்றும் அமைச்சர்களின் பதிலுரை) இன்று எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
7-ந் தேதி நடக்க இருந்த நிகழ்ச்சிகள் (பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மானியம்) 8-ந் தேதிக்கும்; 8-ம் தேதியில் நடக்க இருந்த நிகழ்ச்சிகள் (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, இந்து அறநிலையத் துறை மானியம்) 9-ந் தேதிக்கும்; 9-ந் தேதி நடக்க இருந்த நிகழ்ச்சிகள் (நெடுஞ்சாலைத் துறை மானியம்) 10-ந் தேதிக்கும், 10-ந் தேதி நடக்க இருந்த நிகழ்ச்சிகள் (கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வளத் துறைகள் மானியம்) 11-ந் தேதிக்கும் (சனிக்கிழமை) மாற்றப்பட்டுள்ளன.
13-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஏற்கனவே திட்டமிட்டபடி நிகழ்ச்சிகள் நடத்தப்படும். சபாநாயகர் ஆவுடையப்பன் அறையில் நேற்று நடந்த அலுவல் ஆய்வுக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஒருமித்த கருத்துகளின்படி இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications