கூஜா குண்டு-நெல்லையில் மேலும் 3 பேர் கைது
நெல்லை: மதுரையில் கூஜா குண்டுகளை பதுக்கி வைத்த வழக்கில் போலீசார் மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
நெல்லை சுத்தமல்லியில் ரவுடி மதன் உள்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான 13 பேர் நிபந்தனை ஜாமினில் வெளிவந்து கடந்த மே முதல் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
இவர்களை பழி வாங்க மதனின் கூட்டாளிகள் திட்டமிட்டனர். அவர்கள் மீது வெடிகுண்டு வீசி கொல்வதற்கு சுமார் 25 பேர் தயாராக இருந்தனர். ஆனால், இத்திட்டம் தோல்வியடைந்ததால் கூஜா குண்டுகளை பாலத்தின் அடியில் மறைத்து வைத்தனர்.
இதை கைப்பற்றிய போலீசார் கடந்த 3ம் தேதி 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் வீரவநல்லூர் இசக்கி என்ற இசக்கிராஜ், கல்யாணி என்ற கல்யாண சுந்தரம், குறிச்சியை சேர்ந்த வங்கி ஊழியர் தங்கராஜ் ஆகிய மூன்று பேரையும் நெல்லை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் 2 வக்கீல்கள் உள்பட 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.