வன்னியருக்கு இட ஒதுக்கீடு:மீண்டும் போராடுவோம்-ராமதாஸ்
செஞ்சி: திமுக வன்னியர்களை புறக்கணித்து வருகிறது. இதனால் மீண்டும் தனி இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்த போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செஞ்சியில் நேற்று நடந்து திருமண நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு போராடினோம். 1987ல் அப்போதைய போராட்டத்தின் போது நான் சிறையில் இருந்தேன். இதில் என்னோடு பலரும் சிறைக்கு வந்தார்கள். அவர்களில் அதிகம் பேர் செஞ்சியை சேர்ந்தவர்கள். அந்த போராட்டத்தில் தான் 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பின்னர் 107 சாதியை சேர்த்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்தார்கள். இதை எதிர்த்து சென்னை மெரீனா கடற்கரையில் பட்டை நாமம் போட்டு போராட்டம் நடத்தினேன். தற்போது மீண்டும் பட்டை நாமம் போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியர். இதையும் நான் தான் போராடி பெற்றுத்தந்தேன். தலைமைச் செயலகத்தில் உள்ள துணைச் செயலர்கள் 31 பேர் இருக்கின்றனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே வன்னியர். 300 பேரில் ஒரு வன்னியர் மட்டுமே எஸ்.பி ஆக இருக்கிறார்.
2 கோடி வன்னியருக்கு ஒரு நீதிபதி உள்ளார். அதே சமயத்தில் இசை வேளாளர்களில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு நீதிபதி உள்ளார். அனைத்து துறைகளிலும் இசை வேளாளர்கள் அதிகமாக உள்ளனர்.
சமூக நீதி என்று கூறும் கருணாநிதி எத்தனை வன்னியருக்கு பதவி கொடுத்துள்ளார். திமுகவில் வன்னியருக்கு தலைவர் பதவி, பொது செயலர் பதவி, பொருளர் பதவி இது வரை வழங்கி உள்ளாரா?.
வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
சாராயம் இல்லாத தமிழ்நாடு...
பெண் குழந்தைகளை கட்டாயம் படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தையை கருவிலே அழிக்கக் கூடாது. ஒரு பெண் படித்தால் குடும்பமே படித்த மாதிரி.
தமிழ்நாட்டில்தான் விதவைகள் அதிகம் உள்ளனர். ஏன் என்றால் இங்குதான் அதிக குடிகாரர்கள் இருக்கின்றனர். பெண்கள்தான் கணவரை குடிக்கவிடாமல் திருத்த வேண்டும். சாராயம் இல்லாத தெரு, சாராயம் இல்லாத ஊர், சாராயம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.