பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி போட்டி
கொல்கத்தா: வரும் 2014ல் நடக்கவிருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் போட்டியிட போவதாக முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. அணியின் எழுச்சிமிக்க கேப்டனாக திகழ்ந்தவர். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்வார். இந்நிலையில் இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன் நடந்த ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் அவர் வரும் 2014ம் ஆண்டில் நடக்கவிருக்கும் பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவார் என தெரிகிறது. மேலும், அந்த ஆண்டு தலைவர் பதவி கிழக்கு மண்டலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் கொல்கத்தாவை சேர்ந்த கங்குலிக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது.
இந்த தகவலை கங்குலியும் உறுதி செய்துள்ளார். நேற்று கொல்கத்தாவில் தனது 37வது பிறந்தநாளை அவர் கொண்டாடினார். அப்போது அவர் கூறுகையில்,
இந்திய வாரிய தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இருக்கிறேன். என்னால் இந்த பதவியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
சர்வதேச அளவில் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். சர்வதேச கிரிக்கெட்டின் நிர்வாக செயல்பாடுகளை கூர்ந்து கவனித்துள்ளேன்.
நேரடியாக இந்திய கிரிக்கெட் வாரிய பதவிக்குள் நுழைய விரும்பவில்லை. முதலில் வங்காள கிரிக்கெட் வாரியத்தில் தலைவராக முயற்சிப்பேன். இதற்கான வேலைகளில் உடனடியாக இறங்க வேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகின்றனர்.
அங்கிருக்கும் பலர் என்னை சிறு குழந்தை முதலே அறிந்தவர்கள். அவர்கள் மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். வங்காள கிரிக்கெட்டில் நல்ல மாற்றங்களை செய்ய விரும்புகிறேன். இந்த பதவிகளை நான் அடைய நல்ல வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக செய்ய இருக்கிறேன் என்றார் கங்குலி.
கங்குலியின் இந்த ஆசைக்கு முக்கிய தடைக்கல்லாக இருக்க கூடியவர் ஜக்மோகன் டால்மியா. முன்னாள் பிசிசிஐ மற்றும் பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தவர். இவரும் பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட்டால் கங்குலிக்கு கடும் போட்டி ஏற்படும்.
நாடு திரும்பியது இந்திய அணி...
இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி நேற்று நாடு திரும்பியது.
செயின்ட் லூசியாவில் இருந்து லண்டன் வழியாக இந்திய அணி இன்று அதிகாலை 1.00 மணிக்கு மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையம் வந்து சேர்ந்தது.
கேப்டன் டோணி, அபிஷேக் நாயர், ரோஹித் சர்மாவை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் பின்பக்கம் வழியாக வெளியேறினர்.
இரண்டு மாதம் ஓய்வு...
இந்திய அணி அடுத்ததாக வரும் செப்டம்பர் மாதம் இலங்கையில் நடக்கவிருக்கும் முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரில் மூன்றாவது அணியாக நியூசிலாந்து பங்கேற்கிறது. அதுவரை 2 மாதங்களுக்கு இந்திய வீரர்களுக்கு ஓய்வு தான்.












Click it and Unblock the Notifications