ரவுடிகளை களையெடுக்க தயாராகும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். விரைவில் இதன் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கடந்த சில மாதங்களாக கொலை, கொளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நகை கடை புரோக்கர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் சுமார் ஒரு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் போலீசாருக்கு இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் சென்னையில் இந்த காலக்கட்டத்தில் வழிப்பறி சம்பவங்களும் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார், சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இந்த சம்பவங்களுக்கு காரணமாக கூலி படையினர் மற்றும் ரவுடி கும்பல்கள் குறித்து பட்டியல் தயாரித்து வருகின்றனர்.
அவர்களை ஏ, பி, சி மற்றும் டி என நான்கு பிரிவுகளாக பிரித்து அதற்கேற்றவாறு விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பட்டியல் தயாரிப்பு பணிகளை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர் ரவுடி ஒழிப்பு பிரிவு உதவி கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வடசென்னை ரவுடி ஒருவருக்கும், அரசியல் செல்வாக்குடன் சுற்றி வரும் திண்டுக்கல் தாதாவுக்கும் போலீசார் அதிர்ச்சி அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு ஆந்திராவுக்குள் சென்று ஒழிந்து கொள்ளும் சில தாதாக்களை போலீசார் குறிவைத்துள்ளனர்.
இதன்மூலம் ரவுடிகள் மத்தியில் ஒரு பயத்தையும், பொது மக்கள் மத்தியல் காவல் துறை மீது ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் போலீசார் முயன்று வருகின்றனர்.