போலீசுக்கு கத்தி குத்து-தடா கைதி ஆத்திரம்
நெல்லை: நீதிமன்ற விசாரணைக்கு செல்ல மறுத்த தடா கைதி ஒருவர் காவலுக்கு வந்த போலீஸ்காரரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னமணி தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைதான அப்துல் அஜூஸ் என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று அப்துல் அஜூசை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், எஸ்ஐ ஆபிரகாம், போலீஸ்காரர்கள் அருணாசலம், சரவணன், பழனிவேல், சண்முகவேல் ஆகியோர் அவரை வேனில் ஏற்றினர்.
அப்போது வேனில் ஏற மறுத்த அப்துல் அஜூஸ், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்து இன்ஸ்பெக்டர் ரத்தினவேலு, எஸ்ஐ ஆபிரகாம் ஆகியோரை தாக்கினார். இதில் ரத்தினவேலுவின் சட்டை கிழிந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் அருணாசலம் அஜீசை தடுக்க சென்றார். அப்போது அஜீஸ் அவர் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கி, அதிலிருந்த கத்தியால் அவரை குத்தினார். இதில் அருணாசலத்துக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து கலாட்டா செய்த அருணாசலம் அங்கு வந்த ஆயுதபடை உதவி் கமிஷனர் ராஜாவையும் தாக்க முயற்சித்தார். பின்னர் ஒரு வழியாக போலீசார் அவரை மடக்கினர்.
காயமடைந்த எஸ்ஐ ஆபிரகாம், போலீஸ்காரர் அருணாசலம் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் ஜெயசந்திரன் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.