மீனவர்களுக்காக ஒன்றுபட்ட தமிழக எம்.பிக்கள்
டெல்லி: தமிழக மீனவர்களை துன்புறுத்தி வரும் இலங்கை கப்பற்படையின் கொடூர செயல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக எம்.பிக்கள் அனைவரும் இன்று ஒற்றுமையாக ஒரே குரலில் பேசினர்.
கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கப்பற்படையினரால் எண்ணிலா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை திருடி கொண்டு செல்வதும், மீனவர்களை கடலுக்குள் தள்ளிவிடுவதுமென இலங்கை ராணுவம் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.
சில மீனவர்களை கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். சமீபத்தில் கடத்தப்பட்ட 20 மீனவர்களின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இரண்டு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் ஒரு சேர கோரிக்கை விடுத்தனர்.
இந்த பிரச்சனை குறித்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா கூறுகையில்,
இலங்கை கப்பற்படை நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளது. இதுவரை 100 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு மாநிலங்களவையில் இருந்த தமிழகத்தை சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மக்களவையில் ராமநாதபுரம் திமுக எம்.பி.யும், நடிகருமான ஜேகே ரித்திஷ் பேசுகையில்,
இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்கிறது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால் இலங்கை அரசு அதை மதிப்பதில்லை. இந்த பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார் ஜேகே ரித்திஷ். இவரது கருத்துக்கு மக்களவையில் இருந்த தமிழக எம்.பி.க்களை ஆதரவு தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications