கடலோர மக்களுக்கு அடையாள அட்டை-ப.சிதம்பரம்
டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து கடலோர கிராம மக்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தினர். இது போன்று மற்றொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதில் இந்திய அரசு மிகவும் கவனமாக இருக்கிறது.
இதையடுத்து நாடு முழுவதும் கடல் வழி பாதுகாப்பை உஷார் நிலையில் வைத்துள்ளது. இதை தொடர்ந்து கடலோர கிராமங்களில் வாழும் மக்களுக்கு அடையாள அட்டை வழங்க இருக்கிறது.
இது குறித்து அவர் டெல்லியில் கூறுகையில்,
இந்தியாவில் இருக்கும் 9 மாநிலம் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 3,331 கிராமங்களில் இருக்கும் மக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
இது இந்த கிராமங்களில் உள்ள 18 வயதுக்கு மேலான சுமார் 1.2 லட்சம் மக்களுக்கு வழங்கப்படும். 2011ம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் அடையாள அட்டை கொடுக்கவிருக்கிறோம். இதில் கடலோர கிராமங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
அதே நேரத்தில் மீனவர்களுக்கும், சுமார் 20 மீட்டருக்கு கூடுதலான நீளம் கொண்ட மீனவ படகுகளுக்கும் தனி அடையாள அட்டை கொடுக்கப்படும்.
கடலோர பாதுகாப்பில் இந்திய உளவு நிறுவனங்கள் துடிப்புடன் செயல்பட்டு வருகின்றன. கிடைக்கும் தகவல்கள் மாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் போலீசார் ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications