மத்திய அமைச்சர் மிரட்டியதாக சர்ச்சை எழுப்பிய வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றம்
சென்னை: மத்திய அமைச்சர் மிரட்டியதாக நீதிபதி ஒருவர் கூறிய பரபரப்பு முன்ஜாமீன் வழக்கு, வேறு பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மதிப்பெண்களை திருத்தி முறைகேடு செய்ததாக சிபிஐ தொடர்ந்த வழக்கில் பெரம்பலூர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, அவரது மகன் ஸ்ரீதர் கிருபாகர் ஆகிய இருவரும் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதி ரகுபதி விசாரித்தார். இந்த வழக்கில் மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கக் கோரி மத்திய அமைச்சர் ஒருவர் நீதிபதியை தொலைபேசியில் மிரட்டியதாக உயர்நீதிமன்றத்திலேயே நீதிபதி ரகுபதி தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், இந்த வழக்கை தான் தொடர்ந்து விசாரிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறி விட்டார்.
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் எந்த மத்திய அமைச்சரும், நீதிபதியைத் தொடர்பு கொள்ளவே இல்லை என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.
இந்தநிலையில், தற்போது இந்த முன்ஜாமீன் வழக்கு நீதிபதி ஜெயபால் பெஞ்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகரன், மனுதாரர்களின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வரும் 14ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைக்கு சிபிஐ சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications