கல்லூரி நிலம்-தம்பித்துரை மனு தள்ளுபடி
சென்னை: கல்லூரிக்கு நிலம் ஒதுக்கியதற்காக ரூ. 29 லட்சத்தை தம்பித்துரை செலுத்த வேண்டும். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரைக்கு சொந்தமான ஒசூர் கல்லூரிக்கு கடந்த 1998ல் வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 49 கிரவுண்டு நிலம் ஒதுக்கப்பட்டது.
அதன் பின்னர் கல்லூரி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று கொண்டு மேலும் 12 கிரவுண்டு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், அதற்கான பணத்தை கல்லூரி நிர்வாகம் இதுவரை கட்டவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தம்பிதுரைக்கு நோட்டீஸ் அனுப்பியது. ரூ. 29 லட்சத்தை விரைவில் கட்டுமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த பணத்தை கட்டாத தம்பித்துரை இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந் நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், சிடி செல்வம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அவர் வீட்டு வசதி வாரியத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 29 லட்சத்தை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.