இந்திரா இருந்திருந்தால் இது நடந்திருக்காது-நெடுமாறன்
கோவை: இந்திரா காந்தி மட்டும் இப்போது உயிரோடிருந்திருந்தால் நிச்சயம் ஈழத்தில் தமிழர்கள் ரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள். இத்தனை படுகொலைகள் நடந்திருக்காது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசுகையில், அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. ராணுவ உடன்பாட்டு நாடுகள் உருவாக்கப்பட்டது.
3ஆம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. இதனால் 3ஆம் உலகப்போர் தடுக்கப்பட்டது. ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது குரல் கொடுத்தது அப்போதைய இந்தியா.
நேருவை தொடர்ந்து இந்திராகாந்தியும் அணிசேரா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்தார். வாஜ்பாயும் பின்பற்றினார்.
ஆனால் ராஜீவ்காந்தி காலத்தில் கொள்கை அடியோடு மாற்றப்பட்டது.
இன்று இலங்கையில் சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காலூன்றி விட்டன. இலங்கை அரசின் ராணுவ வெற்றிக்கு 20 நாடுகள் உதவி செய்ததே காரணம் என்று அந்த நாடு கூறியுள்ளது. இலங்கையில் சீனா ஆயுத கிடங்கை திறக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திரா காந்தி மட்டும் இன்னேரம் உயிரோடு இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றார் நெடுமாறன்.