நிவாரண கப்பலுக்கு இலங்கை அனுமதி..காரணம் வேறு
சென்னை: தமிழரர்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற 'கேப் கொலரடோ' கப்பலை இலங்கை ராணுவம் நடுக்கடலில் தடுத்து நிறுத்தியது. இதையடுத்து பல தரப்பில் இருந்து வந்த நெருக்குதலையடுத்து கப்பலை தனது நாட்டுக்குள் அனுமதித்தது. ஆனால், அந்த நிவாரணப் பொருட்களை தமிழர்களிடம் இலங்கை ஒப்படைக்குமா என்று தெரியவில்லை.
இலங்கையில் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சுமார் 884 டன் நிவாரண பொருட்களை லண்டனைச் சேர்ந்த மெர்சி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பியது.
இந்தப் பொருட்களை ஏற்றிவந்த 'வணங்காமண்' என பெயரிடப்பட்ட 'கேப்டன் அலி' கப்பலை இலங்கை ராணுவம் அந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்பியது. கப்பலில் உள்ள பொருட்கள் குறித்து தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக இலங்கை கூறியது.
இதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் ஜூன் 14ம் தேதி இந்தியப் பகுதிக்கு வந்தது. அதை இந்தியாவும் அனுமதிக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசு தலையிட்டதால் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வர அனுமதி தரப்பட்டது.
இதையடுத்து இந்தப் கப்பலில் இருந்த நிவாரண பொருட்கள் கொழும்பு செல்லும் 'கேப் கொலரடோ' கப்பலுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து திங்கள்கிழமை இரவு புறப்பட்ட இந்தக் கப்பல் இலங்கை கிளம்பியது.
இக் கப்பல் நேற்று இலங்கை சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், இந்தக் கப்பலையும் இலங்கை கடற்படை தனது எல்லையில் தடுத்து நிறுத்தியது.
ஆனால் பல்வேறு தரப்பின் நெருக்குதலையடுத்து கப்பல் நுழைய அனுமதி கொடுத்தது. இதையடுத்து அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
இந்தப் கப்பலில் 891 கண்டெய்னர்கள் உள்ளன. இதில் 27 கண்டெய்னர்கள் மட்டுமே நிவாரண பொருள்கள் ஏற்றப்பட்டவை. மற்றவை கொழும்பில் இருந்து வேறு கப்பல்கள் மூலம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டியவை.
எனவே கப்பல் நுழைவதில் தாமதம் ஏற்பட்டால் பல்வேறு வர்த்தக சிக்கல்கள் ஏற்படும். இதற்கு இலங்கை மீது அமெரிக்க-ஐரோப்பிய இறக்குமதியாளர்கள் குற்றம் சாட்டுவார்கள் என்று கப்பல் நிறுவனம் கூறியதையடுத்து கொழும்பில் நுழைய அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆனால் இதில் உள்ள பிற நாட்டு சரக்குகளை மட்டும் மற்ற கப்பல்களுக்கு மாற்ற அனுமதித்துவிட்டு நிவாரணப் பொருட்கள் அடங்கிய 27 கண்டெய்னர்களையும் இலங்கை கிடப்பில் போட்டுவிடும் என்றே தெரிகிறது.
இதனால் இந்த நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்குப் போய்ச் சேருவது நிச்சயமில்லாததாகியுள்ளது.
தமிழக அரசும், மத்திய அரசும், செஞ்சிலுவைச் சங்கமும் தலையிட்டு நெருக்கடி தந்தால் ஒழிய இலங்கை இந்த நிவாரணப் பொருட்கள் கெட்டுப் போகும் வரை துறைமுகத்திலேயே போட்டு வைக்கப் போவது மட்டும் உறுதி.