மாறுவேடத்தில் கமாண்டோக்கள்-திருச்செந்தூரில் பரபரப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே போலீசாருக்கு, தீவிரவாதிகளை பிடிப்பது குறித்து கமாண்டோக்கள் பயிற்சி அளித்தனர். அப்போது பொது மக்கள் கமாண்டோக்களை உண்மையான தீவிரவாதிகள் என நினைத்துவிட்டனர். அவர்களிடம் நிலைமை விளக்குவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதியில் நேற்று போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செந்தூருக்கு அடுத்த வீரபாண்டியன் பட்டிணம் அடுத்த கடலோர கிராமமான ஜெ ஜெ நகர் பகுதியில் அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட மர்ம கும்பல் உலவுவதாக தகவல் கிடைத்தது.
இது பற்றி தெரிய வந்தவுடன் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் அதிரடி வேட்டையில் ஜெஜெ நகர் பைரவர் கோயில் மற்றும் அப்பகுதியில் சுற்றி திரிந்த மர்ம கும்பலை சேர்ந்த 6 பேர் உடனடியாக சிக்கினர்.
சற்று தாமதமாக அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவரும் பிடிபட்டார். இதனை கண்டவுடன் அந்த பகுதி மக்கள் பிடிபட்டது தீவிரவாதிகள் என்று கருதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்களும், பெண்களும் கூட்டமாக திரண்டனர். பிறகுதான் நடந்த சம்பவம் ஓத்திகை நிகழ்ச்சி என்று பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரிகள் விளக்கினர். எனினும் பொதுமக்கள் நம்ப மறுத்துவிட்டதால் அதனை ஊர்ஜிதப்படுத்துவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
மாறுவேடத்தில் படகு மூலம் அந்த பகுதியில் புகுந்த 7 பேரும் சென்னையை சேர்ந்த கமாண்டோ படையினர் ஆவார்கள்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த நாடகத்தில் கடலோர காவல் படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிரத்தினம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரபால், ஸ்டான்லி ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த சம்பவம் நடைபெறும் முன்பு சந்தேகப்படும் படியான மனிதர்கள் யாரேனும் கடலோர கிராம பகுதியில் புகுந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என போலீசார் முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர்.
இதனால் மாறுவேடத்தில் புகுந்த அக்கும்பல் பற்றி அப்பகுதி பைரவர் கோயில் பூசாரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மொத்தத்தில் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கையால் உயர் போலீஸ் அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர்.
ஆனால், அடுத்த முறை நிஜமான தீவிரவாதிகள் வந்தால் கூட பொது மக்கள் கமாண்டோக்கள் என நினைத்து விட்டுவிடுவார்கள். இது போன்ற சோதனைகளை போலீசார் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைத்து கொள்ள வேண்டும். எங்களை போட்டு குழப்ப வேண்டாம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.