காசி முத்துமாணிக்கம் விலகல்-திருநாவுக்கரசரும் விரைவில் பாஜகவுக்கு முழுக்கு?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரின் தீவிர ஆதரவாளரான கவிஞர் காசி முத்துமாணிக்கும் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். திருநாவுக்கரசரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருநாவுக்கரசர், அதிமுகவிலிருந்து விலகி இரு முறை தனிக் கட்சி நடத்தியபோது அவருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர் காசி முத்துமாணிக்கம். பின்னர் திருநாவுக்கரசர் பாஜகவில் இணைந்தபோது அவருடன் சேர்ந்து இணைந்தார். இப்போதும் தீவிரமான திருநாவுக்கரசரின் ஆதரவாளர் இவர்.
பாஜகவில், கலை இலக்கியப் பிரிவு தலைவராக இருந்து வந்த அவர் சமீபத்தில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் திருநாவுக்கரசர் கடுப்பில் உள்ளார். அவரது ஆதரவாளரை அவரிடம் கேட்காமலேயே கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியது இல.கணேசன் அண்ட் கோ.
இந் நிலையில் கட்சியை விட்டே விலகியுள்ளார் காசி முத்துமாணிக்கம். திருநாவுக்கரசரும் அங்கிருந்து விலகி வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
பேசக்கூடாத நேரத்தில் பேசுபவனும், பேசவேண்டிய நேரத்தில் பேசாது இருப்பவனும் பிழையானவர்களே. காலதாமதமான தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்.
இனி எதற்காகவும் திருநாவுக்கரசர் அணியினர் தாமதிக்கப் போவதில்லை. இனி பாஜகவில் நீடிக்கப் போவதும் இல்லை.
டெல்லியில் மீடியாக்களில் தலைவர்கள்' பேசியதாலேயே பாஜக தோற்றது என முன்னாள் மேலவை துணை சபாநாயகர் நஜ்மா ஹெப்துல்லா கூறுகிறார். பாஜக தலைமை நிமிர்ந்து பார்த்ததே தவிர நடவடிக்கை இல்லை.
வருண் காந்தியால்தான் இழப்பு ஏற்பட்டது என பாஜக தேசிய பொதுச்செயலாளர் முக்தர் அப்பாஸ் நக்வி எம்பியும், மேனகா காந்தி- வருண்காந்தி' தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ஷாநவாஸ் உசேன் கூறியதற்கு எந்தவித நடவடிக்கையும் இல்லை.
தோல்விக்கு காரணமாக அருண் ஜெட்லிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி மேலவையிலா என எதிர்குரல் எழுப்பிய மூத்த தலைவர்கள் யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த்சிங் மீதோ, காரின் என்ஜினே பழுதாகி விட்டது', ஆம் டெல்லியே தவறுகளின் கூடாரமாகிவிட்டது. இங்கே முதலில் நடவடிக்கை எடுங்கள் எனக்கூறிய அருண்ஷோரி மீதோ எந்த நடவடிக்கையும் இல்லை.
திருநாவுக்கரசருக்கு பதவி கேட்டதால் நீக்கம்..
ஆனால், சங் பரிவார்களின் பிடிமானமில்லா மாநிலத் தலைவர் பதவியை திருநாவுக்கரசருக்கு தாருங்கள். இல்லையேல் வெளியேறுவோம் என கேட்டதற்கே மாமன் அடித்தானோ மல்லிகைப்பூ செண்டாலே' என மென்மையான சீறலுக்கே நீக்கமா?.
வாழைப்பழத் தோட்டதையே சீரழிக்கலாம்-வாழைப்பழ கூட்டத்தை ஒழுங்குபடுத்தக் கூடாதா? அதிலும் வெளியேறுகிறோம் என்பவர்களை நீங்கள் எப்படி வெளியேற்றுவீர்கள்?.
காற்றோடு கத்தி சண்டை போட முடியுமா? நிழலோடு மல்யுத்தம் நடத்த முடியுமா? இல்லாத ஆளை இழுத்துப் போட்டு வெளியேற்ற முடியுமா? சுட்ட செங்கலை யாரேனும் சூளைக்கு அனுப்புவார்களா?.
தொண்டரே இல்லாத கட்சியாகும்...
இயக்கத்தைவிட்டு வெளியே போகிறோம், போகிறோம் என்பவர்களுக்கு எவர்களாவது இடைநீக்கம் நோட்டீஸ் அனுப்புவார்களா? கார்த்திகைக்கு பின்னாலே மழையில்லை, கர்ணனுக்கு பின்னாலே கொடையில்லை, கம்பனுக்கு பின்னாலே கவிதை இல்லை, திருநாவுக்கரசர் வெளியேறியபின் பாஜகவில் தொண்டரே இல்லை என்கிற சூழல்தான் உருவாகும் என்பது திங்களுக்குப் பிறகு செவ்வாய் என்பதை காட்டிலும் உறுதியானது.
ஆழ்கடலை அகப்பையில் அடைக்கலாம்..
காசி முத்துமாணிக்கத்தை இடைநீக்கம் செய்வதால் மடை வெள்ளம் என வெளிவரும் படை பட்டாளத்தை இல.கணேசனால் தடை செய்யமுடியாது. சீப்பை ஒளித்து விட்டால் திருமணம் நின்றுவிடுமா? புயல் காற்றை பொடி டப்பாவில் அடைக்கலாம், ஆழ்கடலை அகப்பையில் அடைக்கலாம், ஆர்ப்பரித்து புறப்படத் தயாராகும் அரசரின் ஆதரவாளர்களை உங்களால் தடை செய்ய முடியாது.
கூஜா தூக்குவோர்..
அப்பன் செத்தால்தான் அருமை தெரியும் என்பார்களே அதுபோல அரசரின் ஆதரவாளர்களாகிய நாங்கள் வெளியேறிய பிறகுதான் கூஜா தூக்குபவர்கள் எல்லாம் கூஜா கணக்கில் விழிநீர் சிந்துவார்கள்.
மொத்தத்தில் அரசர் வெளிவரப்போவது ஜனவரிக்கு பிறகு பிப்ரவரி என்பதை காட்டிலும் உறுதி. அப்போதுதான் பாஜகவும் சிதறிப்போகும்.
அதே நேரத்தில் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே, மாலை வரும் பின்னே மணம் வரும் முன்னே, மன்னவன் அரசர் வருவார் பின்னே இந்த சின்னவன் நான் விலகுகிறேன் முன்னே'.
பூனைக்கு மணி கட்டிவிட்டேன், படை திரளட்டும் பார் மருளட்டும். பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறக்கப்பட்டது. சிறுத்தையே வெளியில் வா எலி என உனை இகழ்ந்தவர் நடுங்கப் புலி என செயல்பட புறப்பட்டு வெளியில் வா என புரட்சி தளபதியையும், எங்களது ஆதரவாளர்களையும் அழைக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications