வருண் பாதுகாப்பு-ப.சி மீது சுஷ்மா பாய்ச்சல்
டெல்லி: வருண் காந்தியின் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துவிட்டு வந்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சிதம்பரம் தந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று புகார் கூறினார்.
வருண் காந்திக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மக்களவையில் விவாதம் நடந்தபோது, அவரது பாதுகாப்பு குறித்து விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் என்னை நேரில் சந்தித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சிதம்பரம் கூறினார். மேலும் இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா, வருண் பாதுகாப்பு தொடர்பாக தனக்கு எழுதிய கடிதத்தை சிதம்பரம் பகிரங்கப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இந் நிலையில் சிதம்பரத்தை நேரில் சந்தித்து வருண் விவகாரம் குறித்துப் பேசிவிட்டுத் திரும்பிய சுஷ்மா நிருபர்களிடம் பேசுகையில், சிதம்பரம் அளித்த விளக்கத்தில் எனக்கு திருப்தியில்லை என்றார்.
ஆனால் வருண் பாதுகாப்பு தொடர்பாக சிதம்பரம் தெரிவித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
தனது மகனின் பாதுகாப்பு விஷயத்தில் ப. சிதம்பரம் மெத்தனமாக இருப்பதாக மேன காந்தி குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.