சென்னையில் மூதாட்டியை கொன்ற 3 சிறுவர்கள்!
சென்னை: தனியே இருந்த மூதாட்டியைக் கொலை செய்த 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் லட்சுமி குட்டி (72) தனியாக வசித்து வந்தார்.
கடந்த மாதம் 27ம் தேதி லட்சுமி குட்டி கழுத்து அறுக்கப்பட்டு, வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் வீட்டில் பிணமாகக் கிடந்தார். பீரோவில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி வெளியூரில் வசித்து வந்த அவரது மகன் சுவாமி போலீசில் புகார் செய்தார். கொலையாளிகளைப் பிடிக்க வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.
விசாரணையில் லட்சுமி குட்டியின் வீட்டுக்கு எதிரே உள்ள லாண்டரி கடை உரிமையாளரின் பேரன் வேல்முருகன் (17) கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாகிவிட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவனைத் தேடிவந்தனர். இந் நிலையில் தாம்பரம் அருகே சேலையூரில் வேல்முருகன் பதுங்கியிருப்பது தெரிய வந்து அவனை மடக்கினர்.
அவனிடம் விசாரித்தபோது, லட்சுமி குட்டியை இவனும் எம்.ஆர். நகரைச் சேர்ந்த பழனி (15), சின்னாண்டி மடத்தை சேர்ந்த இளவரசன் (14) ஆகிய இரு சிறுவர்களும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டனர்.
வேல்முருகன் லாண்டரி செய்த துணியை கொடுப்பதற்காக லட்சுமி குட்டி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளான். அவர் தனியே வசிப்பதை அறிந்து அவரைக் கொன்று வீட்டிருந்த பணம், நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளான். கூடவே பழனி, இளவரசனையும் சேர்த்துக் கொண்டான்.
120 ரூபாய்க்கு கத்தி வாங்கிக் கொண்டு மூவரும் லட்சுமி குட்டி வீட்டுக்கு சென்று குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். லட்சுமி குட்டி சமையல் அறைக்கள் நுழைந்ததும் மூவரும் அவரை பின் தொடர்ந்து சென்று ஒருவன் லட்சுமி குட்டியின் காலை பிடித்துக் கொள்ள மற்றொருவன் அவரது வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளான்.
அவர் சத்தம் போட்டதால் இன்னொருவன் அவரது கழுத்தை கத்தியால் அறுத்துள்ளான். அவரது வயிற்றிலும் கத்தியால் குத்தி அவர் இறந்ததை உறுதி செய்துவிட்டு, தடயத்தை மறைக்கவும், போலீஸ் மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்கவும் லட்சுமி குட்டியின் உடல் மீது மிளகாய் பொடியை தூவிவிட்டு, பீரோவில் இருந்த ரூ.5200 எடுத்துக் கொண்டு தப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications