டாக்டர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்-விஜய்காந்த்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து பயிற்சி மருத்துவர்களும் தங்களுடைய உதவி தொகையை உயர்த்தி தரவேண்டுமென்று கடந்த 2ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பயிற்சி டாக்டர்கள் வாங்கும் ரூ.4,500யை ரூ.10,000 ஆக உயர்த்தியும் பட்ட மேற்படிப்பு முடித்த பயிற்சி மாணவர்கள் தற்போது வாங்கும் ரூ. 8,000த்தை ரூ.25,000 ஆகவும் உயர்த்தித் தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக முதல்வர் பயிற்சி மாணவர்களுடைய கோரிக்கையை ஏற்று, சிறிதளவு ஊதியத்தை உயர்த்தி அறிவித்தார். ஆனால், இந்த உயர்வு போதாது என்று பயிற்சி மருத்துவ மாணவர்கள் அறிவித்து போராட்டத்தை தமிழகம் முழுவதும் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.
சுகாதார துறை அமைச்சர் இந்த பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் எதுவும் பாதிக்காது என்றும், நிரந்தர டாக்டர்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்து, மற்ற மாநிலங்களில் மருத்துவ கல்லூரிகள் குறைவாக உள்ளதால் அங்கு உதவி தொகை அதிகமாக வழங்கப்படுகிறது என்று அறிவித்தார்.
அதனால், மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் மாணவர்களுக்கு தான் பாதிப்பு என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்தார். ஆனால், பயிற்சி மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
பயிற்சி டாக்டர்கள் 1,500 முதல் 2,000 வரை தான் இருப்பார்கள். அதே போன்று மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் 3,000 முதல் 4,000 வரை தான் இருப்பார்கள். எனவே, பயிற்சி டாக்டர்களின் பிரதிநிதிகளை அரசு உடனடியாக வரவழைத்து நேரில் பேசி ஒரு சுமூகத் தீர்வு காணவேண்டும்.
இந்த பிரச்சினையை முற்ற விடக்கூடாது. மருத்துவமனைகளும் அவசியம், நோயாளிகளின் நலனும் மிக முக்கியம். எனவே, இதில் அரசு கெளரவம் பார்க்காமல், மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.