பாஜகவிலிருந்து விலகல் இல்லை-திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சரான திருநாவுக்கரசரை பாஜக மாநிலத் தலைவராக்க வேண்டும் என்று கோரியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் அவரது ஆதரவாளரான கவிஞர் காசி முத்துமாணிக்கம்.
இதையடுத்து அவர் விடுத்த அறிக்கையில், பாஜகவிலிருந்து திருநாவுக்கரசரும் வெளியேறப் போவது உறுதி என்றும், அவர் வெளியேறியபின் பாஜகவில் தொண்டரே இல்லை என்ற சூழல்தான் உருவாகும் என்றும் கூறியிருந்தார்.
இதற்கு திருநாவுக்கரசர் விளக்கமளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜகவிருந்து நீக்கப்பட்டுள்ள கவிஞர் காசிமுத்து மாணிக்கம் தனது பேட்டியாக பத்திரிகைகளில் வெளியிடும் செய்திகளுக்கும், பத்திரிகைகளில் வெளியிட்டுள்ள அறிக்கைகளுக்கும் எனது கருத்தாக அவர் சொல்லிடும் கருத்து என்று தொலைபேசி மூலம் மற்றவர்களிடம் அவர் பேசிடும் கருத்துக்களுக்கும், எனக்கும் எந்த கருத்து ஒற்றுமையும், தொடர்பும், சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய பாஜக தலைவர்கள், மாநிலத் தலைவர் இல.கணேசன், நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் பற்றி மனம் வருந்தும்படி கவிஞர் காசி முத்துமாணிக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள கருத்துக்கள் எனக்கும் வருத்தம் தரக்கூடியவை ஆகும். இது ஏற்புடையதல்ல.
எனது கருத்தாகவோ, அவரது முடிவாகவோ, அவரது விருப்பமாகவோ, அவரை சம்பந்தப்படுத்தி இதுபோல் பிறர் வெளியிடும் அறிக்கைகளை என் பெயரை தொடர்புபடுத்தி தயவு செய்து வெளியிட வேண்டாம் என்று கூறியுள்ளார் திருநாவுக்கரசர்.