நாங்கள் ஜாதிக் கட்சியா?-முதல்வர் மீது ராமதாஸ் தாக்கு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப் பேரவையில் கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும்போது, நடுநிலையான விவாதத்திற்கும், உண்மை நிலவரங்களை எடுத்து வைப்பதற்கும் எதிர்க் கட்சிகளுக்கு உரிய வாய்ப்பு அளிக்கப்படுகிறதா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றபோது, பாமக குழுத் தலைவர் கோ.க. மணி, நமது மாநிலத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு முறையில் இருந்துவரும் இடர்பாடுகளையும், குறைகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அனைத்து சாதியினருக்கும் பயனும், அதன் மூலம் சமூக நீதியும் கிடைக்கும் வகையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வாதிட்டிருக்கிறார்.
பிற்படுத் தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அண்டை மாநிலங்களான ஆந்திராவில் 5 தொகுப்பாகவும், கர்நாடகத்தில் 7 தொகுப்பாகவும், கேரளாவில் 10 தொகுப்பாகவும் பிரித்து வழங்கப்பட்டு வருவதை நினைவூட்டி தமிழ்நாட்டிலும் அத்தகைய தொகுப்பு இட ஒதுக்கீட்டு முறையை செயல்படுத்தினால் ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் மக்கள் தொகைக்கு ஏற்ப சலுகையைப் பெற்று இட ஒதுக்கீட்டில் முழுப் பயனை பெற முடியும் என்றும், அதுதான் உண்மையான சமூக நீதியாக இருக்கும் என்றும் வலியுறுத்தி கருத்துக்களை எடுத்து வைத்திருக்கிறார்.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கக்கோரி 1980களில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாக 109 சாதிகளை இணைத்து மிகப் பிற்படுத்தப்பட்டோர் என்ற ஒரு பெரும் தொகுப்பை ஏற்படுத்தி ஒட்டுமொத்தமாக அத்தனை பிரிவினருக்கும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு என வழங்கப்படுவதால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர்கள் இட ஒதுக்கீட்டின் முழுப்பயனை அடைய முடியாமல் உள்ள அவல நிலையை எடுத்துக் கூறியிருக்கிறார்.
அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர்களும், முதல்வரும், இவர்களுக்கு ஆதரவாக சில காங்கிரஸ் உறுப்பினர்களும் அடிக்கடி குறுக்கீட்டு அவரது வாதத்தை வேண்டுமென்றே திசை திருப்பி பாமக மீது வீண்பழி சுமத்தியிருக்கிறார்கள்.
முதல்வர் ஒருபடி மேலே சென்று, மீண்டும் சாதிச் சங்கமாக மாற வேண்டாம் என இலவச ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
அரசியல் கட்சியாக செயல்படுவதாலேயே மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வரும் மக்களைப் பற்றி- இன்னும் அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதனால், இலவு காத்த கிளி என்ற பரிதாப நிலையிலேயே இருந்து வரும் ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தைப் பற்றி சிந்திக்கக்கூடாது- பேசக் கூடாது- அவர்களது கோரிக்கைகளை வற்புறுத்தக்கூடாது. அதற்காக வாதாடக்கூடாது என்று முதல்வர் பேச முற்படுவதும், அதற்காக பாமக மீது வீண் பழி சுமத்து வதும் வேதனையாக இருக்கிறது.
ஆரம்பத்தில் அரசியல் சட்டத்தையே குறை கூறி, அதற்காக பொதுத் தேர்தலை புறக்கணித்த கட்சிதான் திமுக. பிறகு அதே அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடைபெறுகிற தேர்தல்களில் போட்டியிட்டு பதவிகளில் அமர்ந்து பிறகு அந்த அரசியல் சட்டத்தையே கொளுத்தியதற்கும், அதனால் தண்டனை அனுபவித்ததற்கும், அரசியல் சட்டத்தை அருகாமையில் உள்ள வங்காள விரிகுடா கடலில் வீசியெறிய வேண்டும் என்று பேசிதற்கும் வரலாறு இருக்கிறது.
இதையெல்லாம் வசதியாக மறந்து விட்டு- மறைத்து விட்டு பாமகவை மட்டும் தனிமைப்படுத்த முதல்வர் முற்பட்டிருப்பது பாமக மீது அவருக்கு இருக்கும் தணியாத கோபத்தையே எடுத்துக் காட்டுகிறது.
தனிநபர் விமர்சனம் செய்தவர்கள் இன்றைக்கு வி.பி.சிங் மீது நான் வைத்துள்ள மரியாதையை கொச்சைப்படுத்த முயற்சித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பாமக குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பாடுபடுகிற, அவர்களுக்காக குரல் கொடுக்கிற ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைக்காகப் போராடுகிற கட்சி என்பதை மறைக்க முதல்வர் முயன்றாலும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications