குளியலறையில் வழுக்கி விழுந்தார் கெளடா-வலது கையில் ஆபரேஷன்
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவே கெளடா தனது வீட்டில் உள்ள குளியலறையில் நேற்று வழுக்கி விழுந்தார். இதையடுத்து காயமடைந்த அவரது வலது கையில் லேசான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவே கெளடாவின் வீடு பெங்களூரில் உள்ள பத்மநாப நகரில் இருக்கிறது. 76 வயதான அவர் நேற்று அதிகாலை சுமார் 1.30 மணிக்கு வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்றுள்ளார்.
அப்போது கதவை திறக்க முயன்ற போது அவர் நிலை தடுமாறி திடீரென கீழே விழுந்தார். அதில் அவரது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் பெங்களூரில் உள்ள மல்லையா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது கையில் காயம் பலமாக இருப்பதால் டாக்டர்கள் அவருக்கு வலது கையில் லேசான அறுவை சிகிச்சை செய்தனர்.
அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் அவர் பெங்களூர் தனியார் ஹோட்டலில் நடந்த கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையி்ல்,
பாஜக அரசு கீழ்த்தரமான அரசியல் செயல்பாட்டினை ஒதுக்கிவிட்டு, வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். விவசாயிகள் உரம் மற்றும் விதைகள் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு போதிய உதவிகளை செய்ய வேண்டும் என்றார் தேவே கெளடா.