தோழியருடன் பேசிக் கொண்டிருந்த மாணவி மாடியிலிருந்து விழுந்து பலி
சென்னை: சென்னை தரமணியில், கல்லூரி விடுதியின் மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த 20 வயது மாணவி, தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த மாணவியின் பெயர் மான்சி கத்தானி. ஆசியன் காலேஜ் ஆப் ஜர்னலிசம் கல்லூரியில் படித்து வந்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் தரமணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார்.
சனிக்கிழமை தனது தோழியருடன் விடுதி மொட்டை மாடியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தடுமாறி கீழே விழுந்து விட்டார். கட்டடங்களின் வழியாக கீழே விழுந்த அவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை அடையாரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து கல்லூரி டீன் ஸ்ரீகுமார் மேனன் கூறுகையில், எப்படி இந்த சம்பவம் நடந்தது என்பது யாருக்கம் சரியாக தெரியவில்லை. மாடிப் படையின் சுற்றுச் சுவரில் அமர்ந்தபோது தவறி விழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
மலர் மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார் என்றார்.
மாடிக்கு யாரும் செல்லக் கூடாது என்று விடுதி நிர்வாகம் மாணவிகளை அறிவுறுத்தியிருந்ததாம். ஆனால் அதை மீறி மாணவிகள் பேசச் சென்றுள்ளனர். அப்போதுதான் இந்த விபரீதம் நடந்து விட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications