பிரான்ஸ், எகிப்து பயணம் - தொடங்கினார் மன்மோகன் சிங்
டெல்லி: பிரான்ஸ், எகிப்து ஆகிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை பிரதமர் மன்மோகன் சிங் இன்று தொடங்கினார்.
எகிப்து நாட்டில் அணி சேரா நாடுகள் மாநாடு நடைபெறுகிறது. அதில் பங்கேற்கிறார் பிரதமர். அதேபோல பிரான்ஸ், தேசிய தின கொண்டாட்டத்திலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் மன்மோகன் சிங்.
இதற்காக அவர் இன்று பிரான்ஸ் கிளம்பிச் சென்றார். பாரீஸ் செல்லும் பிரதமர் அங்கு பிரான்ஸ் தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார்.
இந்தியப் படையினர் அணிவகுப்பு..
தேசிய தின கொண்டாட்டத்தின்போது நடைபெறும் அணிவகுப்பில், இந்திய ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு அணிவகுக்கவுள்ளனர். 400 வீரர்கள் கொண்ட இந்தியப் படைப் பிரிவு அணிவகுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரு உலகப் போர்களிலும் இந்தியா பங்கேற்றதைக் கவுரவிக்கும் வகையில், இந்திய வீரர்கள் அடங்கிய அணிக்கு முதல் முறையாக பிரான்ஸ் அனுமதி வழங்கியுள்ளது.
நாளை நடைபெறும் இந்தக் கொண்டாட்டங்களை முடித்து விட்டு பாரீஸிலிருந்து எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகருக்குக் கிளம்புகிறார் பிரதமர். அங்கு நடைபெறும் 15வது அணி சேரா நாடுகள் அமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறார்.
இந்த பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வங்கதேசம், நேபாள நாட்டு தலைவர்களையும் சந்திக்கிறார் பிரதமர்.