மின்வாரிய பிரிப்பு: கெடு முடிந்தும் தமிழகம் 'தூக்கம்'!
டெல்லி: மாநில மின் வாரியங்களை, உற்பத்தி, விநியோகம், வர்த்தகம் என மூன்றாகப் பிரிக்க மத்திய அரசு உத்தரவிட்டும், அதற்கான காலக்கெடு முடிவடைந்தும் கூட இன்னும் 7 மாநிலங்கள் அதைச் செய்யாமல் உள்ளன. அதில் ஒன்று தமிழ்நாடு.
இதற்கான மத்திய அரசின் காலக்கெடு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது.
இந்தப் பிரிப்பை மேற்கொள்ளாத மாநிலங்கள் - தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், மேகாலயா.
தற்போது இந்த மாநிலங்களுக்கு காலக்கெடு டிசம்பர் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பஞ்சாபுக்கு அடுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
2003ம் ஆண்டு மின்வாரியச் சட்டத்தின்படி மின்வாரியங்களை மூன்றாகப் பிரிக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டது.
ஆனால் பல மாநிலங்களில் இதில் வேகம் காட்டவில்லை. கூடுதல் டைம் கேட்டு வந்தன. சில மாநிலங்கள் பிரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.
இதில் தமிழக அரசு மின்வாரியத்தை மூன்றாகப் பிரிக்க முடிவு செய்து, அதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்ுத விட்டது.
பீகார், ஜார்க்கண்டில் இன்னும் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை. கேரள அரசு திட்டத்தை மட்டும் அறிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வாரிய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிதது வருவதால் அந்த மாநில அரசு என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளது.
இதுவரை 14 மாநிலங்களில் மட்டுமே மின்வாரியங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேற்கு வங்கம், ஒரிசா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கர்நாடக ஆகிய மாநிலங்களில் மட்டுமே மின்வாரியங்கள் லாபத்தை சந்தித்துள்ளன.
பிரிக்கப்பட்ட மாநிலங்களில் மீதமுள்ள 8 மாநிலங்களான அஸ்ஸாம், ஹரியானா, டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகியவை நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதில், உ.பி. மாநிலத்திற்கு மட்டும் ரூ. 4,152 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.