ராகுல் தொகுதியில் மின் வெட்டு-மக்கள் போராட்டம்
அமேதி: ராகுல் காந்தியின் தொகுதியான உ.பி. மாநிலம் அமேதியில், தொடரும் மின்வெட்டால் மக்கள் வெகுண்டெழுந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்ட அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்னர். மேலும், மின் வெட்டு அடிக்கடி தொடர்ந்தால் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரமுகர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் சகிதம் இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மின்வெட்டைக் கண்டித்து தொகுதி முழுவதும் பேனர்கள், தட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தையடுத்து பதட்டம் நிலவுவதால் மாவட்ட நிர்வாகம் அமேதி தொகுதிக்குட்பட்ட கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
கடந்த வாரம் மின்வெட்டு தொடர்பாக பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன.
அமேதி தொகுதியில் ஒரு நாளைக்கு 6 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே மின் விநியோகம் உள்ளது. மற்ற நேரங்களில் மின்வெட்டு உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.