கேரளாவுக்கு கடத்த முயன்ற 216 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
கிருஷ்ணகிரி: தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கடத்தி விற்க முயன்ற 216 ரேஷன் அரிசி மூட்டைகளை கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகசுந்தரம், பறக்கும் படை தாசில்தார் சுப்ரமணியம் ஆகியோர் மாவட்ட எல்லையான நேரலகிரி அருகே திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கர்நாடகாவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 216 மூட்டை ரேசன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ 2 லட்சத்து 7 ஆயிரத்து 400 என கூறப்படுகின்றது.
இதனையடுத்து, லாரி டிரைவர் சிவஞானம்(30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசியை கர்நாடக மாநிலம் பங்காரு பேட்டைக்கு கடத்திச் சென்று அங்குள்ள நவீன அரிசி ஆலைகளில் பாலிஷ் செய்து விற்பனை செய்வது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் கிருஷ்ணகிரி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் வழியாக கேரள மாநிலம் வைக்கத்திற்கு மீண்டும் கடத்திச் செல்லும் வழியில் இந்த அரிசி மூட்டைகள் லாரியுடன் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.