மாலத்தீவுக்கு மணல் ஏற்றுமதிக்கு அனுமதி
சென்னை: மாலத்தீவுக்கு மணல் கொண்டு செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த 'கிருஷ்ணா அண்ட் கம்பெனி' நிறுவனம், மாலத்தீவில் உள்ள 'லோட்டஸ்' என்ற நிறுவனத்துக்கு 6,500 மெட்ரிக் டன் ஆற்று மணல் அனுப்ப ஒப்பந்தம் செய்து கொண்டது.
காரைக்காலில் உள்ள பல்வேறு மணல் வியாபாரிகளிடம் இருந்து 3,750 மெட்ரிக் டன் மணலை வாங்கிய அந்த நிறுவனம் அதை 'ஏசியன் எக்ஸ்பிரஸ்' என்ற கப்பல் மூலம் மாலத்தீவுக்குக் கொண்டு செல்ல மத்திய அரசின் ஏற்றுமதி நிறுவனம், சுங்கத் துறை ஆகியவற்றிடம் அனுமதி வாங்கியது.
இந் நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் இந்த மணல் ஏற்றுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த மணல் தமிழகத்திலிருந்து காரைக்காலுக்கு சட்ட விரோதமாக கடத்தப்பட்டதாவும்ப் புகார் எழுந்தது. இதையடுத்து சுங்கத்துறை தனது அனுமதியை ரத்து செய்தது.
இதை எதிர்த்து 'கிருஷ்ணா அண்ட் கம்பெனி' சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார்,
மனுதாரர் ரூ. 3.75 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதததை செலுத்திவிட்டு மாலத்தீவுக்கு மணலைக் கொண்டு செல்லலாம் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து நாகப்பட்டினம் கலெக்டர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதிகள்,
'கிருஷ்ணா அண்ட் கம்பெனி' உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ள உத்தரவாதத்தில் தமிழகத்தில் இருந்து மணலை எங்கள் நிறுவனம் வாங்காது. தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் மணலையும் எதிர்காலத்தில் ஏற்றுமதி செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், மாலத்தீவுக்கு மணலைக் கொண்டு செல்ல தனி நீதிபதி அளித்த அனுமதியில் நாங்கள் தலையிடவில்லை. ஆனாலும் 'கிருஷ்ணா அண்ட் கம்பெனி' நிறுவனம் ரூ. 16 லட்சத்துக்கு வங்கி உத்தரவாதம் அளித்துவிட்டு மணலை ஏற்றுமதி செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications