சேலம்-திருவாரூர் அதிமுக பிரமுகர்களுக்கு 'கல்தா'
சென்னை: சேலம், திருவாரூர் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் பலரை கட்சியை விட்டு நீக்கியுள்ளார் அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்தபடி இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் கே.செங்கோட்டையன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் கருப்பண்ணன், கொங்கணாபுரம் பேரூராட்சி அதிமுக அவைத் தலைவர் வேலு, கொங்கணாபுரம் அதிமுக செயலாளர் கந்தசாமி, கொங்கணாபுரம் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் முருகேசன், கொங்கணாபுரம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆறுமுகம் ஆகியோர் அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டுள்ளனர்.
கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதுடன், கட்சி கட்டுப்பாட்டை மீறி அதிமுகவுக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டுள்ளனர்.
எனவே இவர்கள் அனைவரும் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர், பொறுப்பு உள்பட அனைத்தும் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
அதே போல் திருவாரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் பக்கிரிசாமியும் இன்று முதல் அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
இன்றும் நாளையும் பாசறைக் கூட்டம்..
இந் நிலையில் வடசென்னை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி அருகில் நடக்கிறது. கூட்டத்துக்கு மாநிலச் செயலாளரும் சசிகலாவின் அண்ணன் மகனுமான டாக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்குகிறார்.
வடசென்னையில் 348 இளம் பெண்கள் பாசறைகளும் 671 இளைஞர்கள் பாசறைகளும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்கள் பாசறையில் 12,053 பேரும், இளைஞர்கள் பாசறையில் 21,495 பேரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாக அதிமுக கணக்கு கூறுகிறது.












Click it and Unblock the Notifications